சென்னை: கொடுங்கையூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி பிசியோ தெரபி 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். அந்த மருத்துவமனையில் ரூ.4 ஆயிரம் மாதாந்திர ஊக்கத் தொகை பெற்ற மாணவி அந்த மருத்துவமனை உரிமையாளரான பிசியோதெரபிஸ்ட் மீது கொளத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ``பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளரும், பிசியோதெரபிஸ்டுமான கார்த்திகேயன் நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு எனக்கு போன் செய்து, நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வருமாறு அழைத்தார். எனவே பகல் 1 மணி அளவில் நான் மருத்துவமனைக்கு சென்றேன்.
அதன் பிறகு, அவரது காரில் என்னை ஏற்றிக்கொண்டு பெண் ஒருவருக்கு மசாஜ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார். இதை நம்பி நான் அவருடன் கொளத்தூர்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் சென்றேன். அப்போது கார்த்திகேயன் காரில் இருந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார்.
அதைக் குடித்ததும் நான்மயங்கிவிட்டேன். அடுக்குமாடிக் குடியிருப்பில் ஓர் அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்த போது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. என்னை அழைத்துச் சென்ற கார்த்திகேயனும் ஆடையின்றி படுக்கையில் எனது அருகில் படுத்திருந்தார்.
அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளிவிட்டு உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து அச்சத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். பயந்துபோய்யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இதுபற்றி எனது அக்காவிடம் கூறினேன்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னுடன் தகாத உறவில் ஈடுபட்ட கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அந்த மாணவியின் புகார் உண்மை எனத் தெரியவந்ததை அடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான கார்த்திகேயனை போலீஸார் கைது செய்தனர். மாணவியை அடைவதற்கு திட்டமிட்ட கார்த்திகேயன் இதற்காக நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று ஏமாற்றி மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.