சென்னை: பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க சென்னை போலீஸார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சென்னையில் சில இடங்களில் இரவில் பைக் ரேஸ் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக அண்ணா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட பல்வேறு பிரதான சாலைகளில் இந்த பைக் ரேஸ் நடப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸாருடன், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் ஒருங்கிணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சென்னை முழுவதும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். இதில் அதிவேகமாக பைக்கில் வந்த சில இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்ளை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மதியம் கே.கே.நகர் ராமசாமி சாலை வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த கே.கே. நகரைச் சேர்ந்த தீபக் (20), அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (21) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மற்றும் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலியுடன், வாகனத்தை அதிவேகமாக ஓட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.