திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன்; அருகில் மணிகண்டன்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் சால்வை அணிவிப்பது போல் வந்து திமுக நிர்வாகியை கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக (தெற்கு) ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். இவர் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீடு வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ளது.
சனிக்கிழமை (பிப்.21) காலை வீட்டில் வைத்து நிர்வாகிகளை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது, சால்வை அணிவிப்பது போல் வந்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் மர்ம நபர், வீரா.சாமிநாதனின் கழுத்தில் குத்தினார். தடுக்க சென்ற நாச்சிமுத்து என்பவரையும் அந்த மர்ம நபர் கத்தியால் குத்தினார்.
அங்கிருந்த திமுகவினர் அந்த நபரை சுற்றி வளைத்து கூம்பூர் போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், காயமடைந்த வீரா.சாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோரை திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸார் விசாரணையில், கத்தியால் குத்திய நபர் எரியோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.