திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே தகாத உறவை கைவிட மறுத்த இளம்பெண் கொலை வழக்கில், அவரது பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரைச் சேர்ந்த விவசாயி சிவன், இவரது மனைவி வைரம்மாள். இவர்களது 3-வது மகள் அமுதா (22). திருமணமாகவில்லை. இவருக்கும், அவரது உறவினரான திருமணமான இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. அமுதாவை பெற்றோர் கண்டித்தனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அமுதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் நேற்று முன்தினம் தெரிவித்தனர். மூலைக்கரைப்பட்டி போலீஸார் அமுதாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணையில், அமுதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் சந்தேகம் எழுப்பியதாகத் தெரிகிறது. அமுதாவின் உடலில் காயங்கள் இருந்ததும் இதை ஊர்ஜிதப்படுத்தியது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அமுதா விஷம் கொடுத்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, சிவன், வைரம்மாள் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மகளை அவர்கள் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.