சென்னை:திருச்சியைச் சேர்ந்தவர் முகமது யூசுப் (36). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், சென்னையில் குத்தகைக்கு வீடு தேடி வந்தார்.
அப்போது ஆன்லைன் செயலி மூலம் மடிப்பாக்கம் குபேரன் நகர் 10-வது தெருவில் வீடு குத்தகைக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் ரமேஷ்குமாரிடம் (49) பேசி, ரூ.15 லட்சத்துக்கு குத்தகை ஒப்பந்தம் செய்தார்.
பின்னர் இணையவழி பணப்பரிமாற்றம் மூலம் ரூ.14.50 லட்சம் செலுத்தி, கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் அந்த வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அதே மாதம் 23-ம் தேதி வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு வந்து, ரமேஷ்குமார் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை ஜப்தி செய்ய உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஜூலை 9-ம் தேதி அந்த வீடு சீல் வைக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது யூசுப், குத்தகை தொகையை திருப்பித் தருமாறு ரமேஷ்குமாரிடம் கேட்டார். அவர் ரூ.2 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.12.50 லட்சத்தை வழங்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
வீடு கடனில் இருப்பதும், நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட உள்ளதும் ஏற்கெனவே தெரிந்திருந்தும், தன்னை ஏமாற்றும் நோக்கில் வீட்டை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக முகமது யூசுப் அளித்த புகாரின்பேரில், கடந்த 11-ம் தேதி மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, கொளத்தூர் ஆசிரியர் காலனியில் இருந்த வீட்டு உரிமையாளர் ரமேஷ் குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.