புரசைவாக்கம் பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் துணிக் கடையில் செம்பு வயர்களைத் திருடிய இளைஞரை, போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (27) சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டுமான மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நிறுவனம் சார்பில், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு துணிக் கடையை புதுப்பிக்கும் பணியில் இவர் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 16ம் தேதி இரவு பணிகளை முடித்துவிட்டுச் சென்ற பிரவீன் குமார். மறுநாள் காலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையில் வைக்கப்பட்டிருந்த மின்சார செம்பு வயர்களை மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில், வேப்பேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் செம்பு வயர்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புரசைவாக்கம் திடீர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (எ) கஜா (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார். அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ செம்பு வயர்களைப் பறிமுதல் செய்தனர்.