சென்னை: ஆடு வாங்கி விற்கும் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, கம்ப்யூட்டர் வியாபாரியிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, மாதவரம், கில்பர்ன் நகரில் வசித்து வருபவர் ஜெகன் (44). அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் கணினி பழுது மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு 2020-ம் ஆண்டு திருமுல்லைவாயலைச் சேர்ந்த பால்ராஜூ (37), அவரது மனைவி தீபா (36), திரு.வி.க. நகரைச் சேர்ந்த இளவழகி (39) உட்பட 5 பேரின் அறிமுகம் கிடைத்தது.
இவர்கள் ஜெகன் வீட்டுக்கு வந்து ஆடு வாங்கி விற்கும் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர். இதை உண்மை என நம்பிய ஜெகன், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.10 லட்சம் கொடுத்தார்.
அடுத்த மாதமே ஆடு விற்பனை செய்ததில் உங்களுக்கு சேர வேண்டிய லாபம் என்று கூறி ரூ.80 ஆயிரத்தை கொடுத்தனர். மேலும் பங்குதாரராக சேர்ந்தால் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் தருவதாகவும், ராஜஸ்தானில் இருந்து ஆடு வாங்கிக் கொண்டு வருவதற்கு சரக்கு வாகனம் வாங்க வேண்டும் என்றும் கூறினர்.
இதையடுத்து, ஜெகன் பல்வேறு தவணைகளாக ரூ.87 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு லாபப் பணம் கொடுக்கப்படவில்லை. அத்துடன், கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகன் இந்த விவகாரம் தொடர்பாக மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான பால்ராஜு, அவரது மனைவி தீபா, இளவழகி ஆகிய 3 பேரை கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த வியாசர்பாடி திரு.வி.க. தெருவை சேர்ந்த சக்திவேல் (51) என்பவரை நேற்றுமுன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.