சிவகங்கை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டத்தரசிகிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராஜூ (68). இவர் 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
குழந்தைகள் நலக் குழு நடத்திய விசாரனையில், ராஜூ பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜூவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ராஜூவுக்கு 3 குற்றப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 61 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.