பிரதிநிதித்துவப் படம்
கரூர்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூதாட்டியின் 7.5 பவுன் தங்கச் சங்கிலிக்கு பதிலாக கவரிங் நகை மாற்றிய மோசடி செய்த புகாரில் தனியார் மருத்துவமனை செவிலியரை குளித்தலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டி குடித்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (60). இவர் அண்ணன் மனைவி தனபாக்கியம் (65). இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக குளித்தலை காவிரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செப்.2-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சிகிச்சைக்கு அனுமதித்த நேரத்திலேயே மூதாட்டி தனபாக்கியம் மயக்க நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஸ்கேன் எடுப்பதற்காக கரூரில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு அன்றைய தினமே சென்றுள்ளார். இதனிடையே, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய மூதாட்டி தனபாக்கியம் அவர் அணிந்திருந்த 7.5 பவுன் தங்கச் சங்கிலி மாற்றப்பட்டு வேறு ஒரு சங்கிலி இருப்பதும், அது கவரிங் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த நடராஜன், குளித்தலை தனியார் மருத்துவமனையில் தனபாக்கியம் சிகிச்சையில் இருந்தப்போது தான் நகை மாற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கருதி குளித்தலை தனியார் மருத்துவமனையில விசாரித்தபோது இதுகுறித்து முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை.
இதையடுத்து குளித்தலை காவல் நிலையத்தில் நடராஜன் செப்.13-ம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய குளித்தலை பெரியபாலம் மலையப்ப நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி சபிதா (36) மூதாட்டி மயக்கத்தில் இருந்தப்போது தங்கச்சங்கிலியை கழட்டி கவரிங் நகையை மாற்றியதும், திருடிய தங்கச்சங்கிலியை உருக்கி பஜனை மடம் பகுதியில் உள்ள நகைக்கடையில் கொடுத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து செவிலியர் சபிதாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செவிலியருக்கு 12 வயதில் ஒரு மகன், 9 வயதில் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.