சென்னை: சென்னை அண்ணாநகர் 3-வது அவென்யூ பகுதியில் சாலையோரம் வசிக்கும் தம்பதியினரின் 4 வயது பெண் குழந்தை, அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தது. அப்போது, டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வெளியே வந்த இளைஞர் ஒருவர் சிறுமியிடம், “இங்கு நிற்கக் கூடாது; உன்னை பெற்றோரிடம் அழைத்துச் செல்கிறேன்” என கூறி, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனம் வேறு திசையில் செல்வதை கண்டு குழந்தை அதிர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், அண்ணாநகர் ஐஏஎஸ் அதிகாரிகள் அகாடமி அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு பலத்த காயமும், சிறுமிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. விபத்தைக் கண்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த இளைஞர் குழந்தையை பெற்றோரிடம் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால், அக்குழந்தை “இவர் யார் என்றே எனக்குத் தெரியாது, ஏமாற்றி அழைத்து வந்தார்” என கூறியது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் துறையினர், குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
விசாரணையில், குழந்தையை அழைத்துச் சென்றவர் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரநாத் (26) என்பது தெரியவந்தது. காயமடைந்த ரவீந்திரநாத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள போலீஸார், அவர் சிறுமியைக் கடத்திச் செல்ல திட்டமிட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.