சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை சீனிவாசபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி மோகனா. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு வாசலில் மகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஷாஹின்ஷா (எ) பாபிலா (34) என்பவர் அங்கு வந்துள்ளார். அவர்தான் மறைத்துவைத் திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை திடீரென மோகனா மீது ஊற்றி, தீயைப் பற்றவைத்து விட்டு தப்பியோடினார். உடலில் தீப்பற்றி எரிய, மோகனா வலியால் அலறித்துடித்தார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணிக்கத்துக்கும் ஷாஹின்ஷாவுக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
இதில் மாணிக்கத்தைப் பழிவாங்கும் நோக்கில், அவரது மனைவி மோகனா மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஷாஹின்ஷாவை காவல்துறையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.