சென்னை: ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். திருவான்மியூர், பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் விஸ்வேஸ்வரன் (29). ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவர் கடந்த 16-ம் தேதி இரவு, பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி சர்ச் ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் கத்தி முனையில் விஸ்வேஸ்வரனிடமிருந்து பணம், செல்போனை பறித்து தப்பினார். இதை சற்றும் எதிர்பாராத அவர் கூச்சலிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு பிடிக்க முற்பட்டபோது, கீழே கிடந்த ஜல்லி கற்களை எடுத்து வீசி எறிந்து, வழிப்பறி கொள்ளையன் தப்பினான்.
இது தொடர்பாக, விஸ்வேஸ்வரன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில், கத்திமுனையில் வழிப்பறி செய்து தப்பியது பெசன்ட் நகரில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்த ஜெயகுமார் (37) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.