பூந்தமல்லி: சென்னை, மதுரவாயலில் கப்பல் பொறியாளரை கொலை செய்து எரித்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை, மதுரவாயலை சேர்ந்தவர் டில்லிபாபு என்ற வெங்கடேசன்(29).
கப்பல் துறையில் பொறியாளராக பணிபுரிந்து வந்த டில்லிபாபுவிடம், மதுரவாயல் கோகுல் என்ற கோகுலகிருஷ்ணன்(38), கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடனை திருப்பி கொடுக்குமாறு கோகுலுக்கு, டில்லி பாபு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.
இதனை அறிந்த கோகுலின் நண்பர்களான மதுரவாயல் கார்மேகம் (38), பூபாலன் (32), ராஜ்குமார் (33), சுந்தரேசன் என்கிற சுந்தர் (32), கடந்த 2012-ம் ஆண்டு பிப். 6-ம் தேதி, காரில் சென்று கொண்டிருந்த டில்லிபாபுவை அவரது வீட்டின் அருகே கடத்தியுள்ளனர்.
பிறகு, கார்மேகம் உள்ளிட்ட 4 பேர், காரிலேயே டில்லிபாபுவை கொலை செய்து, திருவண்ணாமலை பகுதிக்கு உடலை எடுத்து சென்று எரித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் போலீஸார், கோகுல், கார்மேகம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.
முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில் கார்மேகம், பூபாலன், ராஜ்குமார், சுந்தரேசன் ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பூந்தமல்லி, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்- 3 நீதிபதி விஜயகுமார் அளித்தார். அதில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.4,000அபராதம் விதிக்கப்பட்டது. கோகுல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.