ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத மூன்று பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இன்டர்போல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி காவலாளியை கொலை செய்த ஒரு கும்பல் பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக முக்கிய குற்றவாளி சயான் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ், சிபிசிஐடி, ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி, போலீஸாரும் ஆஜராகினர். குற்றவாளி தரப்பில் ஜித்தின் ஜாய் ஆஜராகினர்.
அப்போது, விசாரணை அதிகாரிகள் தரப்பில், இவ்வழக்கில் வெளிநாடுகளில் விசாரணை மேற்கொள்ளவும், பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், இவ்வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாத சதீசன், தீபு மற்றும் சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.