ராமகிருஷ்ணன்

 
க்ரைம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் காரைக்குடி ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை

சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை: 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் காரைக்குடி ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்த ஜோதிடர் ராமகிருஷ்ணன்(52). இவர் பரிகார பூஜைகளை செய்து வந்தார். அவரிடம், 2021-ம் ஆண்டு நவம்பரில் ஜோதிடம் பார்க்க வந்த பெண் ஒருவர், தனது 17 வயது மற்றும் 14 வயது உள்ள 2 மகள்கள் சரியாக படிப்பதில்லை என்று கூறியுள்ளார்.

          

பரிகாரம் செய்தால் இருவரும் நன்றாக படிப்பார்கள் என்று ராம கிருஷ்ணன் கூறியுள்ளார். இதை நம்பி, தனது 2 மகள்களையும் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு அந்த பெண் அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து அந்த பெண்ணை ஓர் அறையில் இருக்குமாறு கூறிவிட்டு, பரிகார பூஜை செய்வதாக கூறி மற்றொரு அறைக்கு 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதை வெளியில் சென்னால் உங்களது தாய், தந்தை இறந்து விடுவர் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயத்தில் சிறுமிகள் வெளியில் சொல்லவில்லை. 2 ஆண்டுகளுக்கு பின்பு 2 சிறுமிகளுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஜோதிடர் ராம கிருஷ்ணன் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமிகள் கூறினர்.

இதுகுறித்து சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு தலா 100 ஆண்டுகள் வீதம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கும் உத்தரவிட்டார். ராமகிருஷ்ணன் மீது இதே போல் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கான தீர்ப்பு இன்று (பிப்.24) அளிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

இந்த நீதிமன்றத்தில் அதிக பட்ச தண்டனையாக ஒரு குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராம கிருஷ்ணன் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT