கரூர்: சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 வங்கதேசத்தினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே தம்மாநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த சிமுல்ஹுசேன்(26), அஜ்மிர் மமுன்(24), ஜமிருல்(32), சகுல் என்ற சைபுர்(29), ஆசிக் ஹாசர்(24) ஆகிய 5 பேர் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்ததாக வெள்ளியணை போலீஸாருக்கு 2024-ம் ஆண்டு செப்.25-ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், 5 பேரையும் போலீஸார் கைது செய்து, சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்ட 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் பரத்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட வங்கதேசத்தினர் 5 பேருக்கும் உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் நுழைந்த குற்றத்துக்காக தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்தவுடன் 5 பேரையும் அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டார். இதையடுத்து, 5 பேரும் மீண்டும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.