சேலம்: சேலம் அருகே ஓமலூரில் அரசுப் பள்ளியில் 5 வயது குழந்தையுடன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆசிரியையை அவரது கணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாலிகடை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவர் காமலாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது, பள்ளியில் ஸ்ரீவித்யா தனது 5 வயது குழந்தையுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென பள்ளிக்குள் புகுந்த அவரது கணவர் விஜயமுருகன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீவித்யாவின் தலை மற்றும் கழுத்துப்பகுதிகளில் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீவித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீஸார், ஆசிரியை ஸ்ரீ வித்யாவின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான விஜயமுருகனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் ஓமலூர் போலீஸார் கூறும்போது, விஜயமுருகன் ஏற்கெனவே விவாகரத்தான நிலையில் ஸ்ரீவித்யாவை 2-வது திருமணம் செய்துள்ளார்.
மனைவி மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் ஸ்ரீவித்யாபுகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவித்யாவை அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது என தெரிவித்தனர்.