சிறையில் உயிரிழந்த ஆசிரியரின் உறவினர்கள், தருமபுரி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடம் முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி: தருமபுரியில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் மணிவண்ணன் (55). 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திமணி கடந்த 15-ம் தேதி தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி ஆசிரியர் மணிவண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தருமபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் ஆசிரியர் பணி யிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறையில் ஆசிரியர் மணிவண்ணனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிறை அதிகாரிகள் அவரை உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் ஆசிரியரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் மணிவண்ணனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உறவினர்கள் நேற்று பிரேத பரிசோதனைக் கூடத்தின் முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எனவே, கூட்டத்தை கட்டுப் படுத்த அதிக எண்ணிக்கையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே, தருமபுரி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிறையில் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததன் அடிப் படையில் அதுகுறித்து தகவலை மணிவண்ணனின் உற வினர்களிடம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு ஒப்புக் கொண்ட உறவினர்கள், தாங்கள் வலியுறுத்தும் மருத்துவரும் பிரேத பரிசோதனை குழுவில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி பிரேத பரிசோதனை முடிந்து நேற்று இரவு 7 மணியளவில் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.