மணலூர் ஜெயபாரத் மெட்ரோ சிட்டி குடியிருப்பில் திருடுபோன தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வீடு.
திருப்புவனம்: திருப்புவனம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 126 பவுன் நகை, ரூ.1.60 லட்சம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூர் ஜெயபாரத் மெட்ரோ சிட்டி குடியிருப்பில் வசிப்பவர் மகேஸ்வரி (50). இவர் கொந்தகை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மகன் பிரபு (35) திருப்புவனத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர்கள் குடும்பத்துடன் செப்டம்பர் 12-ம் தேதி உறவினர் துக்க நிகழ்வுக்காக வீட்டைப் பூட்டி, சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். நேற்றிரவு வீட்டுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடைந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 126 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.60 லட்சம் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, டிஎஸ்பி லோகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், இந்த திருட்டு செப்டம்பர் 13-ம் தேதி இரவு நடைபெற்று இருப்பது தெரியவந்தது.
மேலும், ஜெயபாரத் மெட்ரோ சிட்டி குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் அருகருகே அமைந்துள்ளன. இந்த குடியிருப்பை சுற்றிலும் சுற்றுச்சுவர் உள்ளது. முன்புறமாக எப்போதும் காவலாளி இருப்பதால், பின்புறம் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து, தான் திருடர்கள் வந்துள்ளனர்.
மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.