மாதிரிப் படம்
நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து படகு மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதிக்கு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக, காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வேதாரண்யம் கடலோரப் பகுதியில் க்யூ பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆறுகாட்டுத்துறையில் இருந்து இருசக்கர வாகனத்தில், சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்றவரை போலீஸார் பின்தொடர்ந்தனர். விழுந்தமாவடி அருகே வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த அவரைப் பிடித்து போலீஸார் சோதனையிட்டபோது, ரூ.8 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கக் கட்டிகள் வைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து, அவரிடமிருந்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், அவரிடமிருந்த தங்கக் கட்டிகள் மற்றும் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, தோப்புத்துறையில் உள்ள சுங்கத் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர் நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகே வசித்து வரும் சிவக்குமார்(42) என்பதும், தங்கக் கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டவை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக சுங்கத் துறையினர் வழக்குப் பதிவுசெய்து, தங்கக் கடத்தலில் ஈடுபட்ட சிவக்குமாரை கைது செய்தனர். இவர், 2017-ம் ஆண்டுராமநாதபுரத்தில் நடைபெற்ற தங்கக் கடத்தல் வழக்கிலும்தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.