சென்னை: போதை மாத்திரையாக விற்க பிஹாரிலிருந்து வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்த 8 பேர் கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சென்னை போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கொடுங்கையூர் போலீஸார் கடந்த 19-ம் தேதி இரவு, கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த சிலரிடம் விசாரணை செய்து, சோதனை செய்தபோது அவர்கள் 1,800 வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த கொருக்குப்பேட்டை பிரவீன்குமார் (23), கொடுங்கையூர் அரவிந்த் (27), பைஜான் அஹமது (23), அஜித் (27), சுபாஷ் (25), ஷதாப் உசேன் (27), ரஞ்சித் (28), சஞ்சய் (23) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் பிஹார் மாநிலத்திலிருந்து வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் சட்ட விரோதமாக போதை மாத்திரையாக விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் மீது ஏற்கெனவே 11 குற்ற வழக்குகளும், ரஞ்சித் மீது 6 குற்ற வழக்குகளும், சுபாஷ் மீது 9 குற்ற வழக்குகளும் இருப்பது தெரிந்தது. இவர்கள் 3 பேரும் போலீஸாரின் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.