சென்னை: தோழியின் வீட்டுக்கு விளையாடச் சென்ற சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தோழியின் தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, வியாசர்பாடி பகுதியில் கணவரை இழந்த பெண் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். பகல் நேரத்தில் வேலைக்கு செல்லும் அந்த பெண், தனது இரு மகள்களை வீட்டிலேயே தனியாக விட்டு விட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பெண் வேலைக்கு சென்றபோது, 13 வயதாகும் மூத்த மகள் பக்கத்து வீட்டில் உள்ள தனது தோழி வீட்டுக்கு விளையாடச் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த தோழியின் தந்தை அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, எம்கேபி நகர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ், அந்த நபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா முன்பாக நடந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி குற்றச்சாட்டை நிரூபித்தார்.
இதையடுத்து, நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தோழியின் தந்தைக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதேபோல, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4.1 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.