சென்னை: பெண் அதிகாரியை பழிவாங்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட முன்னாள் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கத்தில் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன பெண் அதிகாரியின் ஆபாசப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது.
அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நிர்வாகி இது தொடர்பாக மாநில சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதன்படி, அப்பிரிவு டிஜிபி சந்தீப் மித்தல் மேற்பார்வையில் உதவி ஆணையர் லிசா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பரப்பியது இளம் பெண் ஒருவர் என்பதும், அவர் அதே நிறுவனத்தில் கடந்தாண்டு அக்டோபரில் வேலையை ராஜினாமா செய்துள்ளார் என்பதும், தனது இந்த நிலைக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெண் அதிகாரியே காரணம் என நினைத்து அவரது புகைப்படத்தை ஏஐ உதவியுடன் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முன்னாள் பெண் ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.