கைதான சக்திவேல், சாந்தகுமார், ராம், ராம்குமார், உதயகிரண்
சென்னை: குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக நம்பவைத்து, தங்க வியாபாரியிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த வழக்கில் தந்தை-மகன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, அமைந்தகரை பகுதியில் வசித்து வருபவர் அன்மோல் ஜெயின் (24). இவர் தனது உறவினர் நமீத் என்பவருடன் சேர்ந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நமீத் கடந்த 17-ம் தேதி அன்மோல் ஜெயினை தொடர்பு கொண்டு, “ஸ்ரீராம் என்பவர் மூலம் 2 நபர்கள் குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறியுள்ளனர். நீ அவர்களை சந்தித்து தங்கத்தை வாங்கி வா” என்று கூறியுள்ளார்.
அதன்படி அன்மோல் ஜெயின், எழும்பூர் மெட்ரோ அருகே சென்றார். அங்கிருந்த ஸ்ரீராம் என்பவர் அவருடன் வந்த 2 நபர்களை சக்திவேல் மற்றும் அவரது தந்தை சாந்தகுமார் என அறிமுகம் செய்துவைத்தார். மேலும், இவர்கள் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்துள்ளனர். குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.
பின்னர் 4 பேரும் 2 பைக்குகளில் எழும்பூர் பவுண்டன் பிளாசா சென்றபோது, உறவினரான நமீத் வேறு ஒரு நபரிடம் கொடுத்தனுப்பிய ரூ.63 லட்சம் பணத்தை அன்மோல் ஜெயின் பெற்றுக் கொண்டு, அந்த பணத்தை சக்திவேலிடம் கொடுத்து தங்கத்தை தருமாறு கேட்டார்.
சக்திவேல் பணத்தை பெற்றுக் கொண்டு மேலே உள்ள அறையில் பணத்தை வைத்துவிட்டு தங்கத்தை எடுத்து வருவதாகக் கூறி பணத்துடன் சென்றுள்ளார்.
சில நிமிடங்களில் சக்திவேலின் தந்தை சாந்தகுமார், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஸ்வீட் கடைக்கு போகலாம் தங்கத்தை மகன் சக்திவேல் அங்கு எடுத்துவருவார் எனக் கூறியதன்பேரில், ஸ்ரீராம் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் ஒரு பைக்கிலும், அன்மோல் ஜெயின் மற்றொரு பைக்கிலும் அண்ணா மேம்பாலம் சென்று கொண்டிருந்த போது, ஸ்ரீராம் வேகமாக பைக்கை ஓட்டிச் சென்று இருவரும் மறைந்துள்ளனர்.
அன்மோல் ஜெயின் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள குறிப்பிட்ட ஸ்வீட் கடைக்கு சென்று பார்த்தபோது, அவர்கள் அங்கு இல்லாததால், 3 நபர்களும் சேர்ந்து ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அன்மோல் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட பெரம்பூரைச் சேர்ந்த சாந்தகுமார் (61), மேற்கு கே.கே.நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் (23), பெரம்பூரைச் சேர்ந்த ராம்குமார் (22), மாதவரத்தைச் சேர்ந்த உதயகிரண் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சக்திவேல் (23) என்பவரும் பிடிபட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.