சென்னை: அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 77 லட்சம் வரை முதலீடுகளை வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு 4 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே கிரீன் வேர்ல்டு பவுண்டேஷன் டிரஸ்ட் என்ற நிதி நிறுவனத்தை அப்பகுதியை சேர்ந்த பிரசன்னா, கோவையை சேர்ந்த சரவணன், கூடுவாஞ்சேரி நந்திவரத்தைச் சேர்ந்த நீலகண்டன் ஆகியோர் கூட்டாக நடத்தி வந்தனர்.
அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.77 லட்சம் வரை முதலீடுகளை வசூலித்த இவர்கள், உறுதியளித்த தொகையை தராமல், குறைந்த தொகையை திருப்பிக் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் நிதி நிறுவன நிர்வாகிகள் 3 பேர் மீதும் செங்கல்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.முருகானந்தம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.பாபு ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பிரசன்னா, சரவணன், நீலகண்டன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.13.96 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்த அபராதத் தொகையில் முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இழப்பீடு போக மீதித்தொகை இருந்தால் அதை அரசின் கணக்கில் சேர்க்க வேண்டும், என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.