செந்தில்குமார்

 
க்ரைம்

பெண் போலீஸுக்கு பாலியல் துன்புறுத்தல்: கோவை சிறப்பு காவல்படை கமாண்டன்ட் கைது

பெண் உதவி ஆய்வாளர் மீதும் வழக்கு

செய்திப்பிரிவு

கோவை: பெண் போலீஸாருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில், கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.

கோவைப் புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4-ம் அணியின் கமாண்டன்ட் எனப்படும் சூப்பிரண்ட் ஆக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (54).

          

இவர் அங்கு பணி செய்யும் 45 வயதான பெண் போலீஸுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் கடந்த ஜனவரி மாதங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை செய்யும் விசாகா கமிட்டிக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விசாகா கமிட்டி பரிந்துரையின்படி, கமாண்டன்ட் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த 12-ம் தேதி கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செந்தில்குமாரை அழைத்து விசாரணை நடத்தியதில் புகார் உண்மையென தெரியவந்ததை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் புகார் அளித்தபோது அதனை கண்டுகொள்ளாமல் செந்தில்குமாருக்கு உதவியதாக, சிறப்புக் காவல் படையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் புஷ்பலதா மீதும் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT