சென்னை: கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சொகுசு காரில் வந்த கும்பல் பாரில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதே தகராறு ஏற்பட காரணம் என, உடன் சென்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்தவர் யான்சி (19). இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் நட்பான தோழியை பார்க்க, 10 நாட்களுக்கு முன்னர் சென்னை, ராமாபுரம் வந்தார்.
பின்னர், தனது 17 வயது தோழி உள்பட, மேலும் சிலருடன் கடந்த சனிக்கிழமை இரவு கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டல் மதுபாருக்குச் சென்றார். அங்கு சொகுசு காரில் வந்த இளைஞர்களுக்கும், யான்சிக்கும் இடையே நடனம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டது.
இந்த ஆத்திரத்தில் காரில் வந்த இளைஞர்கள், யான்சி சென்ற ஸ்கூட்டி மீது மோதினர். இதில், யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக, அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலகுரு (21), சூளைமேட்டைச் சேர்ந்த ஜோஷ்வா (19), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுமந்த் சக்திவேல் (21) உள்பட 7 பேரை கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கொலை நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து, யான்சி உடன் சென்ற அஸ்ரத் என்ற இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: கோயம்பேட்டில் உள்ள ஒரு மது பாருக்கு நண்பருடன் சென்றேன்.
அங்கு யான்சி, அவரது 17 வயது தோழியுடன் வந்தார். இதையடுத்து, நாங்கள் 4 பேரும் மதுபாருக்குள் சென்று மது அருந்தினோம். பின்னர், யான்சி மேடையில் நடனமாடினார்.
அப்போது, அங்கு சொகுசு காரில் வந்த கும்பல் யான்சியின் இடுப்பை கிள்ளியதுடன், தங்களோடு வருமாறும் வற்புறுத்தியது. இதுகுறித்து, யான்சி என்னிடம் கூறினார். நான் உடனடியாக, அந்த கும்பலிடம் பெண்களை தொந்தரவு செய்யாமல் தள்ளி நின்று ஆடுமாறு கூறினேன்.
இதனால், கோபமடைந்த அந்த கும்பல் என்னிடம் தகராறு செய்தது. உடனே பவுன்சர்கள் தலையிட்டு, எங்களை வெளியே அனுப்பி வைத்தனர்.
ஆனால், அந்தக் கும்பல் மதுபாரில் இருந்த மேலும் சில பெண்களிடம் இதேபோல் எல்லை மீறி உள்ளனார். இதனால், அவர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, காரில் வந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த அவர்கள் எங்களிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். எங்களிடம் ஒரே ஒரு ஸ்கூட்டி மட்டுமே இருந்ததால், நண்பர் ஸ்கூட்டியை ஓட்ட, யான்சி, 17 வயது மற்றும் நான் அதில் சென்றோம்.
கோயம்பேடு மேம்பாலத்தை கடக்கும்போது, பாரில் தகராறு செய்த மற்றொரு பிரிவினர், சொகுசு கார் மீது கற்களை வீசி விட்டு தப்பினர். ஆனால், கல்லை வீசியது நாங்கள்தான் என தவறுதலாக நினைத்து, சொகுசு காரில் வந்த கும்பல் எங்கள் மீது காரால் மோதினர்.
இதில், யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்வாறு அந்த வீடியோவில் அஸ்ரத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தவெக பிரமுகரான தொழில் அதிபர் நடத்தி வந்த சம்மந்தப்பட்ட மதுபாரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.