சென்னை: அரசு பள்ளி மாணவனிடமிருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்கேபி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் பயிலும் ஒரு சில மாணவர்களின் நடவடிக்கைகள் ஆசிரியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் மீது சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9.45 மணியளவில் வழக்கம்போல் அந்த மாணவன் பள்ளிக்கு வந்தான். சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் அவரது உடமைகளை சோதனை செய்தபோது ஒரு சிறிய பாக்கெட் (5 கிராம்) கஞ்சாவை இடுப்பில் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அதை கைப்பற்றிய ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர்.
தலைமை ஆசிரியர் இது தொடர்பாக எம்கேபி நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடம் விரைந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வந்த மாணவனிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர், பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பள்ளிக்கு வரும்போது வழியில் கஞ்சா பொட்டலம் கீழே கிடந்ததாக மாணவன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதன் உண்மைத் தன்மை குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.