கொலையாளிகளை கைது செய்யக்கோரி, மறியலில் ஈடுபட்ட மக்கள். (உள்படம்) கொலை செய்யப்பட்ட திருமுகம்.
திருவாரூர்: திருவாரூர் அருகே வீடு புகுந்து செங்கல் சூளை மேஸ்திரியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக வழக்கறிஞர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் திருமுகம்(48). செங்கல் சூளை மேஸ்திரி. இவர், தனது வீட்டில் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு தூங்கிகொண்டிருந்தார். அப்போது நேற்று அதிகாலை 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து திருமுகத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதைத் தடுக்க வந்த திருமுகத்தின் மனைவி சுதா, மகன், மகள் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றது.
இதில், திருமுகம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சுதா, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குடவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் திருவாரூர்- கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருமுகத்தின் உறவினரான, வடகண்டம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், நிலத்தகராறு தொடர்பாக இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.
நண்பர்கள் கண்மணி, திருவாரூர் மணிகண்டன், தீபன் மற்றும் 2 பேருடன் சேர்ந்து ராஜா இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.