நிரஞ்சன்
படப்பை: ஓட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி, கிருஷ்ணர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் நிரஞ்சன் (4). சக்திவேல் பண்ருட்டியில் பஞ்சர் கடையில் வேலை செய்து வருகிறார்.
குழந்தை நிரஞ்சன் வீட்டுக்கு அருகில் வசித்துவரும் தமிழ்குமரன் என்பவரது உறவினர் வீட்டில் நடைபெற்ற சீமந்த நிகழ்ச்சிக்காக கும்பகோணத்தில் இருந்து வந்த உறவினர்கள் படப்பை புஷ்பகிரி பிரதான சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களைப் பார்ப்பதற்காக தமிழ்குமரன் ஓட்டலுக்கு வந்தபோது, சிறுவன் நிரஞ்சனையும் அழைத்து வந்துள்ளார். அப்போது ஓட்டல் வளாகத்தில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
நீச்சல் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்ட உடனிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த படப்பைகாவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் நீச்சல் குளத்தில் தவறிவிழுந்தது எப்படி, அப்போது உடனிருந்தவர்கள் யார், நீச்சல் குளத்தைச் சுற்றி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா, கண்காணிப்புப் பணியில் ஊழியர்கள் இருந்தனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சுப நிகழ்ச்சிக்காக வந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.