கோவையில் இளம்பெண் சடலம் கிடந்த இடத்தில் போலீஸார் விசாரணை  

 
க்ரைம்

கோவையில் இளம்பெண் சடலம் மீட்பு - போலீஸார் தீவிர விசாரணை

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலையில், மதுக்கரை அருகே இளம்பெண் ஆடைகள் இன்றி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மேற்கு புறவழிச்சாலையில், மதுக்கரை அருகே மஞ்சுப்பள்ளம் என்ற பகுதி உள்ளது. இங்கு தனியார் கலை அறிவியல் கல்லூரியின் பின்புறம் உள்ள ஓர் இடத்தில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக இன்று (ஜூன் 24) காலை குனியமுத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான குனியமுத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரி்த்தனர். இளம்பெண்ணின் சடலம் உடலில் ஆடைகள் இன்றி இருந்தன.

உயிரிழந்து கிடந்த இளம் பெண்ணுக்கு 22 முதல் 25 வயதுக்குள் இருக்கலாம் எனத் தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் பிரிவினர், துப்பறியும் மோப்ப நாயை அப்பகுதி முழுவதும் அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த இளம் பெண்ணின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. சடலமாக கிடந்த பெண்ணின் இடது கையில் எஸ் இதயம் வடிவிலான ஹார்ட்டின் குறியீடு ஆர் எனவும், வலது கையில் ஜெகன் எனக் குறிப்பிட்டு ஹார்டின் குறியீடு குத்தப்பட்டு இருந்தது. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

இதற்கிடையே, மதுக்கரை கிராம நிர்வாக அலுவலர் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது, சடலம் கிடந்த இடம் மதுக்கரை காவல் எல்லைக்குட்பட்டது எனத் தெரியவந்தது.

இதையடுத்து மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், மர்ம நபர்கள் இளம்பெண்ணை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதே சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாரும் சந்தேக உயிரிழப்பு பிரிவில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில், அந்த பெண் எவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரியவரும்.

இதற்கிடையே, மதுக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெண் மாயமான புகார்கள் ஏதாவது வந்துள்ளனவா, அவ்வாறு மாயமான பெண்களின் அடையாளமும், உயிரிழந்த பெண்ணின் அடையாளமும் ஒத்துப் போகிறதா, இந்த பெண்ணை கொலை செய்தவர்கள் யார் என்பன குறித்து மதுக்கரை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT