சென்னை: கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை வந்த மின்சார ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பிஹார் இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் ஒன்று கடந்த 26-ம் தேதி இரவு புறப்பட்டு மீஞ்சூர் நிலையத்தை வந்தடைந்த போது, அதில் மீஞ்சூரை சேர்ந்த ஒரு பெண் ஏறினார்.
அந்த பெண், பேசின்பாலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இரவு வேலைக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் பயணித்தார்.
இந்நிலையில், ரயில் கத்திவாக்கம் நிலையத்தை வந்தபோது, அதில் ஒரு மர்ம நபர் ஏறி, தனியாக இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த வாலிபரை, அப்பெண் தடுத்தபோது, அவரின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கிவிட்டு தப்பினார்.
இது குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் அப்பெண் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அந்த நபர் மீஞ்சூரை சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த நபரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர், பிஹார் மாநிலம், மேற்கு சம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் மாஜி (22) என்பதும், தடாபகுதியில் பிளைவுட் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.