பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு வாட்ஸ்-அப்பில் வந்த திருமண அழைப் பிதழை பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பறிபோனது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் நூர் நஹீத் கான் (42). தொழிலதிபரான இவருக்கு நேற்று முன் தினம் வாட்ஸ்-அப்பில் திருமண அழைப்பிதழ் வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில், "எங்கள் திருமணத்திற்கு உங்களை அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விழாவின் முழு விவரங்களுக்கு, இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைப் பதிவிறக்கம் செய்யவும்" என்று எழுதப்பட்டிருந்து.
இதையடுத்து நூர் நஹீத் கான் அந்த இணைப்பில் ஏபிகே கோப்பு வடிவில் இருந்த அழைப்பிதழை பதிவிறக்கம் செய்தார். உடனடியாக அவரது செல்போனில் ஒரு செயலி நிறுவப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 440 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இதையடுத்து அவர் பெங்களூரு இணைய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.