சென்னை: நீலாங்கரையில் பிஹார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 6 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்துள்ளார். அவர், சென்னை நீலாங்கரையில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது, அங்கு பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபன் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற ரூபன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணிபுரியும் ரூபனின் நண்பரான நாகாலாந்தைச் சேர்ந்த ஆலன் உசேன் (19) என்பவரும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.
அது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக இருவரும் சிறுமியை மிரட்டியுள்ளனர். இதில் பயந்துபோன சிறுமி, நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ரூபனை கைது செய்தனர். தலைமறைவான ஆலன் உசேனை தேடி வருகின்றனர்.