ராமநாதபுரம்: ஆன்லைன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் போலீஸ்காரர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கடந்த 2025-ம் ஆண்டு ஆன்லைன் மோசடியில் பல கோடி ரூபாய் இழந்ததாக சிலர் அளித்த புகாரின்பேரில் சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர்.
இந்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். மேலும், மோசடி பணத்தை போலி வங்கிக் கணக்குத் தொடங்கி பணப்பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது.
அதில் ராமநாதபுரம் புல்லங்குடியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸார் பிரதீப், போகலூரைச் சேர்ந்த அப்ரின், சேதுபாண்டியன், சல்மான் கான், சத்திரக்குடியைச் சேர்ந்த தவமுருகன், முகேஷ்வரன், பரமக்குடியைச் சேர்ந்த ஆசிக் சமூதீன் ஆகிய 7 பேரின் வீடுகளில் சென்னை சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் 10-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 7 பேர் பயன்படுத்தி வந்த கார், இரு சக்கர வாகனங்கள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த 7 பேரையும் போலீஸார் கைது செய்து சென்னை சைபர் கிரைம் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.