குமரவேல், வேலன், அய்யப்பன், கலைச்செல்வன்
படப்பை: முன்விரோதம் காரணமாக படப்பை அருகே கல்லூரி மாணவர்கள் 2 பேரை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
படப்பை அருகே வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பரத் (22), சீனு(23), நண்பர்களான இருவரும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்தனர். துக்க நிகழ்சிகளுக்கு கானா பாடல்களை பாடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரகடம் பகுதியில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கானா பாடல் பாடிய பின்னர் இருவரும் படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மணம்பாக்கத்தில் தங்களது நண்பர் லோகேஷ் என்பவரின் வீட்டில் தங்கினர்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பள் பரத், சீனு இருவரையும் வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து படப்பை போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு எதிர்க்கட்சிகளிகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முடிச்சூரை சேர்ந்த ரவுடி குமரவேல் (20), வேலன் (19), பல்லாவரத்தை சேர்ந்த அய்யப்பன் (26), புதுபெருங்களத்துரை சேர்ந்த கலைச்செல்வம் (20), படப்பையை சேர்ந்த சந்தோஷ் மற்றும் 16, 17 வயதுடைய 2 சிறுவர்கள் என 7 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
குமரவேலுக்கும், பரத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் பரத், குமரவேலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக குமரவேலுடன் சுற்றி திரிந்த 16 வயது சிறுவனை தொடர்பு கொண்ட பரத், குமரவேலை கொலை செய்ய அவன் இருக்கும் இடத்தை காட்ட வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுவன் குமரவேலிடம் கூறியுள்ளார். இதையடுத்து குமரவேல் தன் நண்பர்களுடன் சேர்ந்து பரத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பரத்தை வெட்டும்போது தடுக்க வந்த அவரது நண்பர் சீனுவையும் அந்த கும்பல் வெட்டி கொலை செய்தனர் என போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.