திருச்சி: திருச்சி சமயபுரம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சமயபுரம் அருகேயுள்ள மகிழம்பாடி கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் மகேஸ்வரன்(19).
சமயபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்தபோது லால்குடி அருகேயுள்ள பல்லவபுரத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டது.
இதில் இருசக்கர வாகன கண்ணாடி, டூல்ஸ்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்ட மகேஸ்வரன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்தக் கொலை தொடர்பாக லால்குடி அருகேயுள்ள பல்லவபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்(21), மாதவன் (23), வாசு(20), ரோஹன் ஜோயல்(20) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து அவர்களது 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.