பெரியகுளம்: சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பிய ஐயப்ப பக்தர்களின் கார், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் இருவர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம் தடா அருகே உள்ள வாகைபாளையத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குர்லா (32). இவரது மகன் சாதுர்யா (9). நண்பர் வேணு (55) ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு காரில் சென்றனர். அங்கு தரிசனம் செய்துவிட்டு, அனைவரும் இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை முனிதேஜா (28) என்பவர் ஓட்டினார்.
இன்று மாலை பெரியகுளம் வடுகபட்டி புறவழிச்சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் மோதி 15 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் அதே இடத்தில் நரேஷ்குர்லா உயிரிழந்தார். காயமடைந்த மற்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வேணு உயிரிழந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து தென்கரை காவல் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.