க்ரைம்

புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதி பிளேடை விழுங்கி தற்கொலை முயற்சி

இரா.நாகராஜன்

செங்குன்றம்: சென்னை, புழல் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர், பிளேடால் கழுத்து, வயிற்றில் கிழித்துக்கொண்டும், பிளேடை விழுங்கியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் பிரிவுகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னை- மாத்தூரை சேர்ந்த செபாஸ்டின் டேனியல் (24) என்பவர் குட்கா வழக்கு தொடர்பாக சமீபத்தில் கைதாகி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் செபாஸ்டின் டேனியல் நேற்று சிறை வளாகத்தில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தமது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கிழித்துக்கொண்டு பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சக கைதிகள் அளித்த தகவலின்பேரில் சிறைக் காவலர்கள் செபாஸ்டின் டேனியலை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற செபாஸ்டின் டேனியல் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT