தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே கடலில் கவிழந்த நிலையில், மிதந்த இலங்கையை சேர்ந்த படகை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியதாழை மீனவ கிராமத்தில் தினமும் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அதுபோல இன்று (மார்ச் 7) காலையில் சில படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தன. அப்போது, பெரியதாழையில் இருந்து சுமார் 7 கடல்மைல் தொலைவில் ஒரு பைபர் படகு தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது.
இதையடுத்து மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அது இலங்கையை சேர்ந்த படகு என்பது தெரியவந்தது. படகு கவிழ்ந்த நிலையில் மிதந்ததால், அந்தப் பகுதியில் யாரேனும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறார்களா என தேடி பார்த்துள்ளனர். ஆனால், அங்கு யாரும் இல்லாததால் பெரியதாழை மீனவர்கள் அந்தப் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று படகை ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் படகு இலங்கை கல்பிட்டி பகுதியை சேர்ந்த படகு என்பது தெரியவந்தது. இந்தப் படகு நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டதா அல்லது படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கவிழ்ந்து கரைக்கு ஒதுங்கி வந்ததா, படகில் வேறு யாரேனும் மர்ம நபர்கள் வந்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மீட்கப்பட்ட படகை சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் இலங்கை படகு கரைஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.