திருவள்ளூர்: சென்னை, திருவொற்றியூரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் (23). இவர் தன் வீட்டின் அருகே வசித்து வந்த 13 வயது சிறுமியிடம், வீட்டிலிருந்து பணத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, பணத்துடன் வந்த சிறுமியை கபிலன் தன் வீட்டுக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கபிலனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், கபிலன் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து, நேற்று முன் தினம் மாலை மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற உமா மகேஸ்வரி தீர்ப்பு அளித்தார்.
அதில், கபிலனுக்கு சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனைகளை கபிலன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருவது குறித்து நீதிபதி வேதனை தெரிவித்தார்.