சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். பாத்வே புரொடக் ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ள இப்படத்தை ராம் சக்ரி இயக்கியுள்ளார். ஏப்.3-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள்.
அவர்கள் தான் மிகவும் சந்தோஷமானவர்கள். இதை சொல்ல வருவதுதான் இந்த ‘கார்மேனி செல்வம்’ படைப்பு. பணக்காரன் வேறு; செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சினைகளோடு இருப்பவர். செல்வந்தர் மகிழ்ச்சியுடன் இருப்பவர்.
உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவதுதான் இந்தப் படம். ‘கார்மேனி செல்வம்’ சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்தப் படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்” என்றார்.