தமிழ், தெலுங்கில் வெற்றிபெற்ற ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்குப் பிறகு, வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இதில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், ஆக. 14-ல் வெளியாகவுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள டீஸர், பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெங்கி அட்லூரி, இது நேரடி தெலுங்குப் படம் அல்ல; தமிழில் உருவாக்கப்பட்ட படம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “தனுஷுடன் ‘வாத்தி’ படத்தை உருவாக்கியபோது அவருக்கு தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகியிருப்பதால் அதை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கினோம். ஆனால், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை தமிழில் முழுமையாகப் படமாக்கி, பிறகு தெலுங்கில் டப்பிங் செய்தோம். சூர்யாவுடன் படம் இயக்குவது நீண்டநாள் கனவு. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து மீண்டும் படம் இயக்க விரும்புகிறேன்” என்றார்.