சென்னை: சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்க ஹெச்.வினோத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வெளியீடாக மே 14-ம் தேதி ‘கருப்பு’ மற்றும் ஜூலை மாதத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
ஜீத்து மாதவன் படத்தை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் இறுதிகட்ட கதை விவாதம் உள்ளிட்டவை விரைவில் தொடங்கவுள்ளன. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, ‘ஜனநாயகன்’ படத்துக்குப் பிறகு இருக்கும் என தெரிகிறது.
ஹெச்.வினோத் படம் தவிர்த்து பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுள்ளார். ஆனால், எதுவுமே அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கியுள்ளார் ஹெச்.வினோத். அப்போதே இரண்டு படங்கள் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. அதில் ஒரு படமாக இப்போது சூர்யா படத்தை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத்.