தமிழ் சினிமா

ஜோதிகா பகிர்ந்த திருமண நாள் கொண்டாட்டம் - ‘ஸ்பெஷல் நாளின் சில தருணங்கள்’

ப்ரியா

நடிகை ஜோதிகா தனது 20-வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு, ‘எங்களின் சிறப்பான நாளின் சில தருணங்கள்’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

நட்சத்திர தம்பதியான சூர்யா - ஜோதிகா தங்களின் 20-வது திருமண நாளை செப்டம்பர் 11-ம் தேதி கொண்டாடினர். அந்தக் கொண்டாட்டத்தின் பதிவுகளையும், புகைப்படங்களையும் ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

திருமண நாள் கொண்டாட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை செப்டம்பர் 15-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘தொடர்ச்சி’ என்ற தலைப்பில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஜோதிகா. அந்த வீடியோவில் சூர்யா, ஜோதிகா இருவரும்  வெள்ளையாடை உடுத்தி இருக்கின்றனர். 

ஜோதிகாவை மகன் தேவ் கைபிடித்து அழைத்து வர, சூர்யாவை மகள் தியா அழைத்து வருகிறார். இருவரும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.

‘தொடர்ச்சி’ என்று தலைப்பிட்ட பதிவில் அவர், ‘எங்களின் 20 ஆண்டு அன்பு மற்றும் சண்டையைக் கொண்டாடும் விதமாக எங்களின் திருமண உறுதி மொழியை புதுப்பித்துக் கொள்கிறோம்.

இது மிகவும் நேர்த்தியான திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் இல்லை. மாறாக விட்டுக்கொடுத்தல், புரிதல், தியாகம், சுயநலமில்லாமல் ஒருவர் மற்றவரை நேசித்தல் ஆகியவைகளை உள்ளடக்கிய கொண்டாட்டம். இது ‘நாங்கள்’ என்பதற்கான கொண்டாட்டம்.

உண்மையில் வெகுதூரத்தில் இருப்பதாக தோன்றிய ஒரு கனவு, என் வாழ்நாள் முழுவதும் நான் காணும் கனவாக நிஜமாகி இருக்கிறது. ஆகவே இது என் உறுதிமொழிகள்’ என்று அவர் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகளை கூறியுள்ளார்.

இன்று வெளியிட்டிருக்கும் பதிவில், எங்கள் சிறப்பான நாளின் சில தருணங்கள் எனக் குறிப்பிட்டு திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அந்த நாளை சிறப்பானதாக மாற்றிய அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜோதிகா.

சூர்யா - ஜோதிகா திருமணம் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்தது. கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் இந்த இணை முதன்முறையாக சேர்ந்து நடித்திருந்தனர்.

SCROLL FOR NEXT