தமிழ் சினிமா

கிறிஸ்டோபர் நோலனுடன் பணியாற்ற சாய் அபயங்கர் விருப்பம்

ப்ரியா

‘ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்’ என்று இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறுகையில், ‘இந்த 21 வயதில் நான் பல விஷயங்களை சாதித்திருப்பதாக சொன்னீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இன்று நான் அடைந்திருக்கும் அனைத்தும் கடவுளின் ஆசிர்வாததால் கிடைத்தது. பலரின் அன்பும், ஒத்துழைப்பு இந்தப் பயணத்துக்கு துணையாக இருந்துள்ளது. கடவுளின் அருளால் எனது கனவுகள் நிஜமாகின்றன.

நான் இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன். இன்னும் நான் தொடவேண்டிய உச்சம் வெகுதூரத்தில் உள்ளது. இப்போது எனக்கு இருக்கும் ஒரே நோக்கம், கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்க வேண்டும். மக்களுக்கு நல்ல இசையைக் கொடுக்க வேண்டும்.

எனது வீட்டில் உள்ள அறையில், குறைந்த வசதிகளுடன் நான் பாடல்களை உருவாக்கியபோது அதை வெளியிடுவேன், மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் யோசித்தது கூட கிடையாது.

என் முதல் பாடலை மக்கள் ஏற்றுக் கொண்டபோது, தொடர்ந்து இதுபோல பாடல்களை உருவாக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போதும் மக்களிடம் பாடல்கள் வரவேற்பு பெறும்போது அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் வரும்.

எனக்கு கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணியற்ற  வேண்டும் என்று விருப்பம். என்னுடைய இசையைப் பற்றி அவர் விசாரிப்பது போல் ஒரு ஏஐ வீடியோ ஒன்று பார்த்தேன். அது ஒருநாள் நிஜமாகும்” என்று கூறினார். 

இந்த மேடையில் சாய் அபயங்கர் தனது அடுத்த தனி இசை பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ‘ரதிமா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாடல் ஒரு காதல் தோல்வியை மையமாகக் கொண்டது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT