சென்னை: மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலில் உண்மையில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தனது அடுத்த படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தான் பணிபுரிந்து வருகிறார் மணிரத்னம். இருவரும் இணைந்து நான்கு பாடல்கள் வரை உருவாக்கி இருக்கிறார்கள். ‘ரோஜா’ படத்தில் தொடங்கிய இந்தக் கூட்டணி, இதுவரை பிரியாமல் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிறது. ஆகையால், இந்தக் கூட்டணி பிரியவில்லை என்பது உறுதியாகிறது.
ஜூலை மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து, ஆண்டு இறுதியில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் மணிரத்னம். தியாகராஜன் குமாராஜா இயக்கி வரும் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, மணிரத்னம் படத்துக்கு ஒரே கட்டமாக தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.