தமிழ் சினிமா

‘கருப்பு’ படம் மீதான விமர்சனம்: ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

ஸ்டார்க்கர்

‘கருப்பு’ படம் மீது எழுந்துள்ள விமர்சனத்துக்கு இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கருப்பு’. தமிழகம் மட்டுமன்றி உலகளவில் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘கருப்பு’ படத்தின் வெற்றியைக் கொண்டாட திரையரங்குகளுக்கு சென்று வருகிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. அப்போது அளித்த பேட்டியில் ஆர்.ஜே.பாலாஜி, “‘கருப்பு’ படத்தை குடும்பமாக பார்க்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டே உருவாக்கினேன். விமர்சகர்களுக்காக அல்லது இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களுக்காக இப்படத்தை உருவாக்கவில்லை. இதனை பட வெளியீட்டுக்கு முன்பே தெளிவுப்படுத்தி உள்ளேன்.

‘கருப்பு’ மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படம். எனவே, இதனை பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் உறுதியாக இருந்தோம். திரையரங்குக்கு தயாரிப்பு நிறுவனமே ஆட்களை அனுப்பி சாமி ஆடச் செய்திருக்க வேண்டும் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். அப்படி ஆட்களை அனுப்புவதற்குத் தேவைப்படும் பெரிய தொகையை எங்களால் செலவிட்டிருக்கவே முடியாது.

இதில் உண்மை என்னவென்றால், பார்வையாளர்கள் இப்படத்தை தங்களுக்கு சொந்தமான ஒரு படம் என்று கொண்டாடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT