‘கருப்பு’ படத்தைச் சுற்றி இருந்த சர்ச்சைகள் மற்றும் ஓடிடி விவகாரம் குறித்து ஆர்.ஜே,பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 14-ம் தேதி வெளியாகிறது. இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இதன் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை, ஓடிடி உரிமை இன்னும் விற்பனையாகவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அளித்துள்ள பேட்டியில், “ரசிகர்களோ தொடர் அப்டேட்டுகளை எதிர்பார்க்கிறார்கள். அதனை சரியான நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என படக்குழு நினைக்கும். தற்போது எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்துமே தகவல் பரிமாறும் ஊடகமாக மாறிவிட்டது. இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் சண்டை என ஒரு ரசிகர் பதிவிடுவது தொலைக்காட்சி ஊடகம் வரை பிரபலமாகிறது. அதனைப் பார்த்துவிட்டு என் வீட்டில் எல்லாம் கேட்டார்கள்.
உலகில் எந்தவொரு விஷயம் நடந்தாலும், அவை சமூக ஊடகங்களில் மிகைப்படுத்தப்படுகின்றன, தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. இந்தக் காலத்தில் இதனை குறைக் கூறவோ, மாற்றவோ முடியாது. தற்போது நாம் அமைதியாக இருக்க வேண்டும். சிலசமயங்களில் நாமே முன்வந்து சில விஷயங்களை தெளிவுப்படுத்த வேண்டியதிருக்கிறது.
கொரனோ காலத்தில் ஓடிடி தளங்கள் மிக முக்கியமாக இருந்தன. ஆனால், இப்போது அதே நிலை தொடர்கிறது என நினைக்கவில்லை. தற்போது சந்தை நிலைகள் மாறியிருக்கிறது. முன்பு, ஓடிடி ஒப்பந்தத்தை வைத்து ஒரு படத்தின் பட்ட்ஜெட்டை தயாரிப்பாளர்கள் முடிவு செய்தார்கள். கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கும் பணத்தினை ஓடிடி நிறுவனங்கள் கொடுப்பதில்லை.
மேலும், ஓடிடி தளத்தின் வெளியீடும் திட்டமிட்டப்படி அமையவில்லை. ‘கருப்பு’ படமும் இந்தக் காலகட்டத்தை கடந்து வந்துள்ளது. ஆனால், இப்போது அனைத்து சரியாகி ‘கருப்பு’ படத்தின் ஓடிடி ஓப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி