திரைப்படக் கலையில் ‘மழை’ ஓர் உணர்ச்சிக் கருவி. ஒளிப்பதிவாளர்களுக்கு மழை, ஒரு சவாலான மற்றும் அழகிய மூலக்கூறு. ஒரு காட்சியின் ‘மூட்’ அல்லது சூழலை உடனடியாக மாற்றும் வல்லமை கொண்டது மழை. வறண்ட நிலத்தில் பெய்து ஒரு புதிய நம்பிக்கையைத் தரும் மழை, தனிமையில் இருக்கும் கதாபாத்திரத்துக்கு துயரமான பின்னணியைத் தரும்.
மழையின் தொழில்நுட்ப ரகசியங்கள்
மழையைப் படம்பிடிப்பதில் உள்ள முக்கியமான தொழில்நுட்ப ரகசியம் ‘பேக் லைட்டிங்’. மழைத்துளிகள் ஒளி ஊடுருவக் கூடியவை (Transparent) என்பதால், கேமராவுக்கு முன்னால் இருந்து ஒளியைப் பாய்ச்சினால் அவை திரையில் சரியாகத் தெரியாது. ஒளியானது கேமராவுக்கு எதிரே, அதாவது மழைத்துளிகளுக்குப் பின்னால் இருந்து வரும்போதுதான் ஒவ்வொரு துளியும் ஒளிரும் (ரிம் லைட்).
மழையைத் திரையில் ஆழமாகக் காட்ட, ரெயின் மெஷின் லேயரிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஃபோர்கிரவுண்ட், மிட்-கிரவுண்ட் மற்றும் பேக்-கிரவுண்ட் என மூன்று அடுக்குகளாக மழையைப் பொழிய வைப்பார்கள். அப்போதுதான் அந்த இடமே மழையில் நனைவது போன்ற தத்ரூபமான உணர்வு கிடைக்கும்.
உலக சினிமாவின் மழைக் காவியங்கள்
சிங்கின் இன் தி ரெய்ன் (1952): மழை என்றாலே சோகம் என்ற பிம்பத்தை உடைத்த படம். இதில் மழை என்பது காதலின் பரவசம் மற்றும் சுதந்திரத்தின் வெளிப்பாடு.
பைசைக்கிள் தீவ்ஸ் (1948): வறுமையையும் சமூகத்தின் பாராமுகத்தையும் காட்ட விட்ரியோ டி சிகா மழையைப் பயன்படுத்தினார்.
தி மிரர் (1975): ஆண்ட்ரி தர்கோவ்ஸ்கியின் இப்படத்தில் மழை என்பது கனவு நிலைப் பொருள். இது நினைவுகள், காலம் மற்றும் ஆழ்மன உணர்வுகளைக் குறிக்கும் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப் பட்டது. மெதுவான அசைவுகளில் பெய்யும் மழை, பார்வையாளரை தியான நிலைக்கு அழைத்துச் செல்லும்.
பிளேட் ரன்னர் (1982) மற்றும் செவன் (1995): நவீன சினிமாவில் மழையானது ஒரு ‘நாய்ர்’ (Noir) உலகத்தையும், தார்மீகச் சிதைவையும் காட்டப் பயன்படுத்தப்பட்டது.
தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் (1994): இதில் மழை மறுபிறப்பின் அடையாளம்.
இன் தி மூட் ஃபார் லவ் (2000): வாங் கார்-வாய், மழையை ஒரு தாளகதியாக (Rhythmic tool) பயன்படுத்தி சொல்லப்படாத காதலையும் ஏக்கத்தையும் பிரதிபலித்தார்.
இந்திய சினிமாவின் மழைக் காட்சிகள்
பியாசா (1957): மழையைத் தனிமையின் கவிதையாக மாற்றினார் குரு தத்.
காதல் கோட்டை: மழையை ஒரு வலிமையான காட்சி ஊடகமாகப் பயன்படுத்தினார் தங்கர் பச்சன். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மழையில் நகரும். அந்தத் தீவிரமான மழை, காதலர்களின் பதற்றத்தையும் இறுதியில் ஒன்றிணையும் நெகிழ்ச்சியையும் பல மடங்கு அதிகப்படுத்தியது.
மனோஜ் பரமஹம்சா - ‘ஈரம்’ (தி ஏஸ்தடிக்ஸ் ஆஃப் க்ரே)
நவீன தமிழ் சினிமாவில், ‘ஈரம்’ திரைப்படத்தின் மூலம் மழையை ஒரு புதிய கோணத்தில் காட்டினார் மனோஜ் பரமஹம்சா. படம் முழுவதும் ஒருவிதமான சாம்பல் நிற வானத்தையும் இருளையும் ஈரப்பதத்தையும் நிலைநிறுத்தினார்.
மழையை ஒரு கொலைக்கான கருவியாகவும், ஒரு மர்மமான பின்னணியாகவும் பயன்படுத்திய விதம் இந்திய ஒளிப்பதிவில் ஒரு மைல்கல். இதில் மழையின் நிறம் மற்றும் ஒளியமைப்பு ஒருவிதமான குளிர்ச்சியான நடுக்கத்தைப் பார்வை யாளருக்குக் கடத்தியது.
ஆசிய சினிமாவின் நுணுக்கங்கள்
பேரசைட் (2019): பாங் ஜூன்-ஹோ மழையை வர்க்கப் பிரிவினையைச் சொல்லும் ஒரு சமூக அரசியல் கருவியாக மாற்றினார்.
இன் த மூட் ஃபார் லவ் (2000): வாங் கார்-வாய் மழையை ஒரு தாளகதியாக (ரிதமிக் டூல்) பயன்படுத்தினார். ஸ்லோ-மோஷன் காட்சிகளில் பெய்யும் மழை, கதாபாத்திரங்களுக்கு இடையிலான சொல்லப்படாத காதலையும், ஏக்கத்தையும் (லாங்கிங்) அதிகப்படுத்தியது.
திகில் திரைப்படங்களில் மழை
திகில் திரைப்படங்களில், மழை அச்சுறுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘போல்டர்கிஸ்ட்’ (Poltergeist) போன்ற படங்களில், மழையும் மின்னலும் பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன.
மழையின் இரைச்சல் பின்னணியில் இருக்கும் போது, ஒரு சிறு சத்தம் கூட பார்வையாளரை அதிர வைக்கும். திரைக்கதையில் ஒரு கதாபாத்திரத் தை ஓரிடத்தில் முடக்கி வைக்கவோ (isolation) அல்லது தப்பிக்க முடியாத சூழலை உருவாக்கவோ மழை ஒரு மிகச்சிறந்த கருவியாகச் செயல்படுகிறது.
மழை ஒளிப்பதிவில் ஒளிப்பதிவாளர் கவனிக்க வேண்டியவை மழைக்காட்சிகளைப் படம்பிடிக்கும்போது சில முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
பின்னணியின் முக்கியத்துவம்
மழையைப் படம்பிடிக்கும்போது ‘பின்னணி’ மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மழைத்துளி கள் தெளிவாகத் தெரிய வேண்டுமானால், பின்னணி இருண்டதாக அல்லது அதிக ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும்.
வெளிச்சமான அல்லது வெள்ளை நிறப் பின்னணியில் மழை பெய்தால், மழைத்துளிகள் ஒளியோடு கலந்து கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். எனவே, அடர் பச்சை நிறக் காடுகள், இரவு நேரத்து இருண்ட வீதிகள் அல்லது நிழல் படிந்த சுவர்கள் மழையின் காட்சித் தன்மையை மெருகூட்டும்.
எக்ஸ்போஷர் ரகசியம் (The Art of Under-exposure)
மழை, பனிமூட்டம் அல்லது புகை போன்ற சூழல்களைப் படம்பிடிக்கும்போது, எக்ஸ்போஷர் அளவைச் சற்று குறைவாக (Slightly Under-exposed) வைப்பதே சிறந்தது. நாம் ஓவர்-எக்ஸ்போஸ் செய்ய முற்பட்டால், மழையின் வெண்மை மற்றும் சாம்பல் நிறங்கள் அடிபட்டுப் போய்விடும்.
இதனால் காட்சியின் விவரங்கள் மறைந்து, ஒருவிதமான ‘clinical’ அல்லது செயற்கையான தோற்றம் உருவாகிவிடும். சற்று ‘அண்டர்-எக்ஸ்போஸ்’ செய்வதன் மூலம் மழையின் அடர்த்தியையும், காற்றில் கலந்திருக்கும் ஈரப்பதத்தின் தன்மையையும் தத்ரூபமாகக் கொண்டு வர முடியும்.
இயற்கை ஒளியும் மழையும்
இயற்கையான மேகமூட்டமான நாட்களில் (Overcast days), ஒளி மென்மையாக இருக்கும். இது மழைத்துளிகளின் மீது விழும்போது ஒரு மென்மையான ஜொலிப்பைத் தரும். இந்தச் சூழலில் ‘பேக்-லைட்டிங்’ நுட்பத்தை மிக நுணுக்கமாகக் கையாள்வதன் மூலம், மழையை ஒரு கவித்துவமாக மாற்றலாம்.
உச்சி வெயிலைத் தவிர்த்தல்
கடுமையான சூரிய ஒளியில் மழையைப் படம்பிடிப்பது மிகவும் செயற்கையாகத் தெரியும். சூரிய ஒளி மழைத்துளிகளை மறைத்துவிடும்.
மாலை மற்றும் இரவு நேரங்கள்
மழையைப் படம்பிடிக்க மாலை அல்லது இரவு நேரங்களே உகந்தவை. அப்போதுதான் ஒளியைக் கட்டுப்படுத்தி மழைத்துளிகளைத் தெளிவாகக் காட்ட முடியும்.
நேச்சுரல் டிஃபியூஷன்
மேகமூட்டமான வானம் இயற்கையான ஒரு ‘சாஃப்ட் பாக்ஸ்’ போலச் செயல்படும், இது முகங்களில் மென்மையான ஒளியைத் தரும். அகிரா குரசோவா தனது ‘ரஷமோன்’ திரைப்படத்தில் மழைத்துளிகள் திரையில் தெளிவாகத் தெரிவதற்காக தண்ணீரில் பால் கலந்து படம்பிடித்ததாகச் சொல்லப்படுவதுண்டு.
உலக சினிமா மாஸ்டர்களின் இத்தகைய தேடல்தான் சினிமாவை வளர்த்தன. சரியான ‘பேக் லைட்டிங்’ மற்றும் லேயரிங் நுட்பங்கள் மூலம் ஒளிப்பதிவாளர் திரையில் மழையைக் கவிதையாக மாற்ற முடியும்.
‘காதல் கோட்டை’யின் ரயில் நிலைய மழை முதல், ‘பேரசைட்’ திரைப்படத்தின் வர்க்கப் போராட்ட மழை வரை, மழை இன்றும் சினிமாவின் மிக வலிமையான காட்சித் தனிமமாகத் திகழ்கிறது.
(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com